உள்ளூர் செய்திகள் (District)

ஓய்வு பெற்ற பெண் பொறியாளரிடம் 11 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு

Published On 2023-09-26 08:46 GMT   |   Update On 2023-09-26 08:46 GMT
  • ஓய்வு பெற்ற பெண் பொறியாளரிடம் 11 பவுன் தாலிச்சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார்
  • கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு போலீசார், மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்

பெரம்பலூர்,

தூத்துக்குடி ராமசாமிபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி முனீஸ்வரி (வயது 64). ஓய்வு பெற்ற இளமின் பொறியாளரான இவர் பெரம்பலூர் கோல்டன் சிட்டி 8-வது தெருவில் வாடகை வீட்டில் உள்ள தனது மகன் விஷ்ணு சக்கரவர்த்தி குடும்பத்துடன் வசித்து வருகிறார். விஷ்ணு சக்கரவர்த்தி வேப்பூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் குமாஸ்தாவாகவும், அவரது மனைவி சத்யபிரியா அரியலூரில் உள்ள வங்கி ஒன்றில் குமாஸ்தாவாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.இதனால் இவர்களின் 3½ வயது ஆண் குழந்தையை முனீஸ்வரி கவனித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை 9 மணியளவில் முனீஸ்வரி பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள கடை ஒன்றில் காய்கறிகள் வாங்கிவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் முனீஸ்வரியின் கழுத்தில் கிடந்த 11 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக முனீஸ்வரி பெரம்பலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்

Tags:    

Similar News