உள்ளூர் செய்திகள்

108 பவுன் நகை- ரூ.3 லட்சம் கொள்ளையில் மர்மகும்பலை பிடிக்க போலீசார் தீவிரம்

Published On 2023-10-08 09:39 GMT   |   Update On 2023-10-08 09:39 GMT
  • லட்சுமணன் வீட்டை பூட்டி விட்டு சென்று ஒருவாரம் ஆவதால் கொள்ளை நடந்தது எப்போது என்று தெரியவில்லை.
  • கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

மதுராந்தகம்:

மதுராந்தகம் அடுத்த சோத்துப்பாக்கம்.எஸ். வி.எஸ் நகரில் வசித்து வருபவர் லட்சுமணன். ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி. இவர் கடந்த மாதம் 29-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு திருவண்ணாமலையில் உள்ள தனது மகள்வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார்.

இந்நிலையில் நேற்று மாலை அவர்கள் திரும்பி வந்த போது வீட்டின் முன் பக்க கதவு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 108 பவுன் நகை, ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

இதுகுறித்து மேல்மரு வத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். லட்சுமணன் வீட்டை பூட்டி விட்டு சென்று ஒருவாரம் ஆவதால் கொள்ளை நடந்தது எப்போது என்று தெரியவில்லை.

சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். அந்த பகுதி புதிதாக உருவாகும் குடியிருப்பு ஆகும். இதனால் நெருக்கமாக வீடுகள் இல்லை. இதனை பயன்படுத்தி மர்ம நபர்கள் பூட்டி இருந்த லட்சுமணனின் வீட்டை குறிவைத்து நகை-பணத்தை அள்ளிச்சென்று உள்ளனர்.

மர்ம கும்பல் லட்சுமணன் வெளியூர் சென்று இருப்பதை நோட்டமிட்டு கைவரிசை காட்டி இருப்பது தெரிந்தது. கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை மேல்மருவத்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News