உள்ளூர் செய்திகள் (District)

சமையல் போட்டியில் வெற்றி பெற்ற ஒரு பெண்ணுக்கு ராஜா எம்.எல்.ஏ. பரிசு வழங்கிய காட்சி.

குற்றாலம் சாரல் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

Published On 2022-08-08 09:06 GMT   |   Update On 2022-08-08 09:06 GMT
  • குடும்ப தலைவிகளுக்கு மறந்து போன உணவுகளுக்கான சமையல் போட்டியை நடத்தினார்.
  • முதல் பரிசு மீனாம்பிகைக்கும், 2-வது பரிசு நாகேஸ்வரிக்கும், 3-வது பரிசு நிர்மலாவுக்கும் வழங்கப்பட்டது.

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் 5-ந் தேதி முதல் சாரல் திருவிழா தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.

சாரல் திருவிழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கலைவாணர் அரங்கத்தில் நேற்று உணவு கலை நிபுணர் பழனி முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மறந்து போன உணவுகளை மலர வைப்போம் என்ற தலைப்பில் குடும்ப தலைவிகளுக்கு மறந்து போன உணவுகளுக்கான சமையல் போட்டியை நடத்தினார்.

இப்போட்டியில் சுமார் 14 குடும்ப பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களது வீட்டிலேயே பாரம்பரிய உணவுகளான வேர்க்கடலை லட்டு, பொரி அரிசி குழம்பு, வெந்தயக் கலி, ஆடி கும்மாயம், நெல் சோறு, தினை சாக்கோ பால்ஸ், பலாப்பழ மைசூர்பாக், கருப்பு கவுனி சாம்பார் சாதம், குறித்த பல்வேறு பாரம்பரிய உணவுகளை சமைத்தனர்.

சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு ஓட்டல் ட்ரிசில் சார்பாக முதல் பரிசு மீனாம்பிகைக்கும், 2-வது பரிசு நாகேஸ்வரிக்கும், 3-வது பரிசு நிர்மலாவுக்கும் வழங்கினார்.

மேலும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 12 குடும்ப தாய்மார்களுக்கும் ஆறுதல் பரிசாக ரூ.500 க்கான கூப்பனையும் வழங்கினார்கள். தென்காசி வருவாய் கோட்டாட்சியர் கங்காதேவி, பழனி முருகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதனையடுத்து பளுதூக்கு தல் போட்டி, ஆணழகன் போட்டி மற்றும் யோகா போட்டி மாவட்ட இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்டது.

அதற்கு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் மற்றும் ராஜா எம்.எல்.ஏ. மாவட்ட இளைஞர் நலன் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ராஜா எம்.எல்.ஏ. பரிசுகளை வழங்கினார்.

வலு தூக்குதல் போட்டியில் 70 மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டு முதல் பரிசு, 2-ம் பரிசு, 3-ம் பரிசு என்று 9 பரிசுகள் வழங்கப்பட்டது.

பின்பு ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நேற்று விடுமுறை நாள் என்பதால் கலைவாணர் அரங்கம் முழுவதும் பார்வை யாளர்கள் நிறைந்து காணப்பட்டனர். 

Tags:    

Similar News