குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் மறியல்
- ஏரிக்காடு பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் விநியோகிக்கவில்லை.
- ஒகேனக்கல் வழியாக செல்லும் அஞ்செட்டி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே உள்ள ஏரிக்காடு பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் விநியோகிக்கவில்லை.
இதனால் பள்ளி குழந்தைகள், அலுவலகப் பணிக்கு செல்வோர் என அனைவரும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இதுகுறித்து புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என தெரிவித்து ஆத்திரமடைந்த பெண்கள் காலி குடங்களுடன் இன்று காலை பென்னாகரம் ஒகேனக்கல் வழியாக செல்லும் அஞ்செட்டி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது பேச்சுவார்த்தை நடத்த வந்த பஞ்சாயத்து தலைவர் பாஸ்கரிடம் பெண்கள் சராசரியாக கேள்வி கேட்டனர். கடந்த ஒன்றரை மாதமாக சாலையை சீரமைக்கின்றோம் என்ற பெயரில் சாலையை உடைத்து பைப் லைனை துண்டித்து சாலைப் பணிகளை நிறுத்தப்பட்டுள்ளன என முறையிட்டனர்.
அதற்கு பஞ்சாயத்தில் போதுமான நிதி ஆதாரம் இல்லாததால் வேலை பணிகள் நிறுத்தப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஒகேனக்கல்போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.