உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அணையில் இருந்து பாரூர் ஏரிக்கு விநாடிக்கு 300 கனஅடி தண்ணீர் திறப்பு

Published On 2024-06-01 04:22 GMT   |   Update On 2024-06-01 04:22 GMT
  • முதல்போக சாகுபடி குறிப்பிட்ட நேரத்தில் தொடங்க முடியுமா என்கிற அச்சம் விவசாயிகளிடையே ஏற்பட்டது.
  • பாரூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் நெல் நடவிற்காக நிலங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றனர்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து கடந்த 2 நாட்களாக விநாடிக்கு 12 கனஅடியாக நீடிக்கிறது. இந்நிலையில் நேற்று கிருஷ்ணகிரி அணையில் இருந்து உபரிநீர், பாரூர் ஏரிக்கு செல்லும் வகையில் விநாடிக்கு 300கனஅடி தண்ணீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர், காவேரிப்பட்டணம், பெண்ணேஸ்வரமடம் வழியாக நெடுங்கல் தடுப்பணைக்கு செல்கிறது.

இந்த தடுப்பணையில் இருந்து கால்வாய் வழியாக பாரூர் ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. பாரூர் ஏரியை பொறுத்தவரை ஏரியின் மொத்த கொள்ளளவான 15.60 அடியில் தற்போது 9.50 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் விடப்பட்ட பின்பு தான், கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் முதல்போக சாகுபடிக்காக பாரூர் ஏரியில் இருந்து திறக்க வேண்டிய உள்ளதால், அணையில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக, நீர்வளத்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால், நீர்நிலைகளில் வறண்டு வரும் நிலை ஏற்பட்டது. குறிப்பாக, கிருஷ்ணகிரி அணைக்கு ஒரு மாதத்திற்கு மேலாக நீர்வரத்து ஜீரோ நிலையில் காணப்பட்டது. இதனால் கிருஷ்ணகிரி அணை நீர்மட்டம் 38 அடிக்கும், பாரூர் ஏரியின் நீர்மட்டம் 3.60 அடிக்கு கீழே சரிந்தது.

இதனால் முதல்போக சாகுபடி குறிப்பிட்ட நேரத்தில் தொடங்க முடியுமா என்கிற அச்சம் விவசாயிகளிடையே ஏற்பட்டது. இவ்வாறான நிலையில், மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கோடை மழையால், அணைகள், ஏரிகள், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக, கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 44.85 அடி, பாரூர் பெரிய ஏரியின் நீர்மட்டம் 9.50 அடியாக உயர்ந்ததுள்ளது குறிப்பிடதக்கது. பாரூர் ஏரிக்கு அணையின் உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், பாரூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் நெல் நடவிற்காக நிலங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றனர்.

Tags:    

Similar News