உள்ளூர் செய்திகள் (District)

பேரணியில் கலந்து கொண்ட மாணவிகள்.

மகளிர் தினத்தையொட்டி நெல்லையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி - நீதிபதி சமீனா தொடங்கி வைத்தார்

Published On 2023-03-09 09:23 GMT   |   Update On 2023-03-09 09:23 GMT
  • பாளை பஸ் நிலையம் அருகே உள்ள ஒய்.எம்.சி.ஏ. தொண்டு நிறுவனம் மற்றும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி இணைந்து சாலை பாதுகாப்பு பேரணியை இன்று நடத்தியது.
  • சாலை விபத்து என்பது ஒரு சில நொடிகளிலேயே நடந்து விடுகிறது.

நெல்லை:

பாளை பஸ் நிலையம் அருகே உள்ள ஒய்.எம்.சி.ஏ. தொண்டு நிறுவனம் மற்றும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி இணைந்து சாலை பாது காப்பு பேரணியை இன்று நடத்தியது.

விழிப்புணர்வு பேரணி

மகளிர் தினத்தையொட்டி நடந்த இந்த விழிப்புணர்வு பேரணியை லோக் அதாலெத் மாவட்ட நீதிபதி சமீனா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

சாலை விபத்து என்பது ஒரு சில நொடிகளிலேயே நடந்து விடுகிறது. ஆனால் அதன் பாதிப்பு என்பது நீண்ட காலம் தொடரக்கூடியது. சாலை விபத்துகளில் இளம் வயதினர் உயிரிழப்பது அவர்களது பெற்றோருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும்.

தற்போது இருசக்கர வாகனங்கள் மூலமாக ஏற்படும் விபத்துகள் அதிகரித்துள்ளது. இளம் வயதினர் பலர் சாலையின் நடுவே மோட்டார் சைக்கிள் களை வேகமாக ஓட்டி செல்கின்றனர். இதனை தவிர்க்க வேண்டும்.

கவனம் தேவை

பல நேரங்களில் பெரிய வாகனங்களின் மீது மோட்டார் சைக்கிள்கள் மோதும் போது சிறிய வாகனங்களுக்கு தான் சேதம் அதிகமாகிறது. எனவே அதிக கவனம் தேவை. பெண்கள் உள்பட அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும் சாலை விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேரணியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்த பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்றனர்.

பேரணியானது தொண்டு நிறுவனத்தில் தொடங்கி ஐகிரவுண்டு சாலை வழியாக பாளை பஸ் நிலையம் வந்தடைந்து அங்கிருந்து மீண்டும் தொண்டு நிறுவ னத்தில் முடிவடைந்தது. தொடர்ந்து பேரணியில் பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப் பட்டன.

Tags:    

Similar News