பறை இசைத்து பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
- பாதையில் நடந்து செல்பவர்களுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் உயிரிழப்புகளை தடுப்பதாகும்.
- வாகன ஓட்டுடிகளின் கண்களை பாதிக்காத அளவில் குறைந்த அளவு வெளிச்சத்தை பயன்படுத்த வேண்டும்.
தஞ்சாவூர்:
விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கவும், பயணத்தில் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளவும் தஞ்சை நகர போக்குவரத்து ஒழுங்கு பிரிவுடன் இணைந்து ஜோதி அறக்கட்டளை சார்பில் தமிழர்களின் பாரம்பரிய கலையான பறை இசை மூலம் பொதுமக்களிடம் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தஞ்சை ரெயில் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சை நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு இரு சக்கர, நான்கு சக்கர, கனரக வாகன ஓட்டுனர்களிடம், பொதுமக்களிடமும் சாலை பாதுகாப்பு குறித்த விதிகளை விளக்கி கூறி பறை இசை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சாலை பாதுகாப்பு விதிகளின் முக்கிய நோக்கமே பாதையில் நடந்து செல்பவர்களுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் உயிரிழப்புகளை தடுப்பதாகும்.
வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை சாலை விதிகளை சரியாக கடைப்பிடிப்பதன் மூலம் தவிர்க்க இயலும்.
இரவில் வாகனம் ஓட்டும்போது எதிரே வரும் வாகன ஓட்டுடிகளின் கண்களை பாதிக்காத அளவில் குறைந்த அளவு வெளிச்சத்தை பயன்படுத்த வேண்டும், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று பொதுமக்களுக்கு விளக்கி கூறினார்.
மேலும், அவ்வழியாக வந்த இரு சக்கர, நான்கு சக்கர, கனரக வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஓட்டினார்.
விழாவில் ஜோதி அறக்கட்டளை சார்பில் பறை இசைத்து பொதுமக்களிடம் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சாலை பாதுகாப்பு குறித்து நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய தஞ்சை போக்குவரத்து ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார்களையும், ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகளையும் பொதுமக்கள் பாராட்டினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி, அறக்கட்டளை மாணவ தன்னார்வலர்கள் ஆர்த்தி, காயத்ரி ராமச்சந்திரன், பூவிழி வீரமணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.