அரசு உர கிடங்குகளில் யூரியா தட்டுப்பாடு; விவசாயிகள் வேதனை
- உர கடைகளில் யூரியா, டிஏபி உள்பட அத்தியாவசிய உரங்கள் விற்பனை நடைபெற்று வந்தது.
- யூரியா போன்ற அத்தியாவசிய உரங்கள் உரிய நேரத்தில் கிடைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மெலட்டூர்:
தஞ்சாவூர்மாவட்டம், பாபநாசம் அதனை சுற்றியுள்ள திருக்கரு காவூர், மெலட்டூர், தேவராயன்பேட்டை, அகரமாங்குடி, உள்பட பல பகுதிகளில் அரசு வேளாண்மை கூட்டுறவு சங்க உரக்கிடங்குகள் மற்றும் தனியார் உரக்கடைகள் உள்ளது.
இந்த உர கடைகளில் யூரியா, டிஏபி உள்பட அத்தியாவசிய உரங்கள் விற்பனை நடை பெற்று வந்தது.
இந்நிலையில் இந்த உரகடைகளில் தற்போது யூரியா உள்ளிட்ட அத்தியாவசிய உரங்கள் கிடைக்காததால் சம்பா விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
தற்போது சம்பா பருவத்தில் நடவு பணிகள் முடிந்து 20 நாட்களை கடந்த நிலையில் சம்பா பயிர்களுக்கு உரம் தெளிக்கக்கூடிய பருவமாகும் சம்பா பயிருக்கு தேவையான யூரியா, டிஏபி போன்ற உரங்கள் மெலட்டூர், திருக்கருகாவூர், பாபநாசம் உள்பட முக்கிய பகுதிகளிலும், அரசு வேளாண்மை கூட்டுறவு கிடங்குகள் மற்றும் தனியார் சில்லரை விற்பனை மையங்களில் யூரியா கிடைக்காததால் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
தனியார் உர வியாபா ரிகள் சிலர் இணை உரங்கள் வாங்கினால் மட்டுமே யூரியா தரப்படும் என இணை உரங்களை வாங்க விவசாயிகளை கட்டாயப்படுத்துகின்றனர் ஆகையால் சம்பா பயிர்கள் வளர்ச்சிக்கு யூரியா போன்ற அத்யாவசிய உரங்கள் உரிய நேரத்தில் கிடைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.