உள்ளூர் செய்திகள் (District)

தூக்குப்போட்டு பெண் தற்கொலை

Published On 2023-09-19 07:33 GMT   |   Update On 2023-09-19 07:33 GMT
  • தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
  • கணவனை இழந்த மகள்-பேரனை தவிக்க விட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலை பாப்பா பட்டியை சேர்ந்தவர் நீலாமணி (வயது 50). இவருடைய கணவர் ராஜேந்திரன் கடந்த 25 வருடங்களுக்கு முன்பாக பிரிந்து சென்று விட்டார். இவரது மகள் ராஜேஸ்வரி (31), பேரன் சதாசிவத்துடன் வசித்து வந்தார். ராஜேஸ்வரியின் கணவர் சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இதனால் தாயுடன் வசித்து வந்த அவர், அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். நீலாமணி கடந்த சில ஆண்டுகளாக நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இருப்பினும் நோய் குணமாகவில்லை. வருமானம் இல்லாமல் மருந்து மாத்திரைகளுக்கு செலவழித்து கொண்டே இருந்ததால் மனவிரக்தியில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எஸ்.வி.மங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனை இழந்த மகள்-பேரனை தவிக்க விட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News