வி.ஏ.ஓ. தாக்கப்பட்டதைக் கண்டித்து கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- வி.ஏ.ஓ. தாக்கப்பட்டதைக் கண்டித்து கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம நிர்வாக ஊழியர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நெற்குப்பை
திருப்பத்தூர் அருகே உள்ள அய்யாபட்டியைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து (வயது 56). இவர் சிராவயல் கிராம நிர்வாக அலுவலராக கடந்த 3 மாதங்களாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று வேலைமுடிந்து திருப்பத்தூரில் இருந்து சிராவயலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு இருசக்கர வாகனம் பின்னால் வந்தது. அதில் மர்மநபர்கள் இருந்தனர். அவர்கள் திடீரென பிச்சைமுத்துவின் வாகனத்தை வழிமறித்து நிறுத்தினர். அதில் ஒருவர் வாகனத்தில் இருந்து இறங்கி உருட்டைக் கட்டையால் பிச்சைமுத்துவை தாக்கியுள்ளார். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் காயமடைந்த பிச்சைமுத்துவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் நாச்சியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்தும், விரைவாக குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் தர்மராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம நிர்வாக ஊழியர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.