உள்ளூர் செய்திகள் (District)

சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் டீன் ரேவதி பாலன் குறைகளை கேட்டறிந்தார்.

புறநோயாளிகளை விருந்தினரைபோல பார்த்துக் கொள்கிறோம்- டீன் பெருமிதம்

Published On 2022-09-15 09:11 GMT   |   Update On 2022-09-15 09:11 GMT
  • சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளை விருந்தினரைபோல பார்த்துக்கொள்வதாக டீன் தெரிவித்தார்.
  • 100 படுக்கைகளும், மருத்துவமனை வளாகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அமருவதற்கான இருக்கை களும் ஏற்படுத்தி உள்ளேன்.

நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் அப்துல் வாஹித். இவர் இதே பகுதியில் 4 சக்கர வாகனத்தை நாள் வாடகை ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று இவர் சிவகங்கைக்கு திருமண நிகழ்விற்காக சென்றபோது எதிர்பாராத விதமாக மூச்சுத் திணறலும், நெஞ்சுவலியும் ஏற்பட்டது. உடனடியாக அவரை சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் துரிதமாக பரிசோதித்து 2 மணி நேரத்தில் இயல்பு நிலைக்கு மாற்றினர்.

இது குறித்து மருத்துவமனை டீன் ரேவதிபாலன் கூறுகையில், இங்கு வரும் எந்த ஒரு நோயாளியையும் இவர் உள்நோயாளி, இவர் புறநோயாளி என்ற பாகுபாடின்றி வீட்டிற்கு வரும் விருந்தினரைபோல நன்றாக கவனித்துக் கொள்கிறோம். நான் 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மருத்துவமனைக்கு பணிமாறுதலாகி வரும்போது முகப்பு தோற்றம், வளாக பகுதிகளில் நோயாளிகளுடன் வரும் நபர்கள் அமருவதற்கு இருக்கை இல்லாத நிலையும், நோயாளிகளின் படுக்கைகள் பற்றாக்குறையாகவும் இருந்தது.

தற்போது அமைச்சர், கலெக்டர் உதவியுடன் புதிதாக 100 படுக்கைகளும், மருத்துவமனை வளாகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அமருவதற்கான இருக்கை களும் ஏற்படுத்தி உள்ளேன்.

கொரோனா தொற்று காலங்களில் மிகவும் குறைந்த நோய் தொற்று உள்ள மாவட்டமாக சிவகங்கை இருந்தது. இதற்கு காரணமாக என்னுடன் பாடுபட்ட மருத்துவர்கள், செவிலிய ர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இவர்களுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியை தந்துள்ளது என்றார்.

சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கும் அப்துல் வாஹித் கூறுகையில், என்னை போன்ற அடித்தட்டு மக்கள் நோய் நொடி காலங்களில் ஏற்படும் இக்கட்டான சூழ்நிலையில் பணத்தை வீண்விரயம் செய்யாமல் மற்ற மாநிலங்களை காட்டிலும் மக்கள் நலனில் அக்கறை காட்டி தமிழக அரசு வழங்கும் அனைத்து மருத்துவ சலுகைகளையும் பெற்று பயன்பெற வேண்டும் என்றார்.

கடந்த காலங்களில் தூத்துக்குடி, விருதுநகர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் டீன் ரேவதி பாலன் மருத்துவராகவும், டீனாகவும் பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News