உள்ளூர் செய்திகள்

சுகபிரசவத்தில் பிறந்த குழந்தை திடீரென இறந்ததால் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர், உறவினர்கள் சாலை மறியல் நடத்தினர்.

சுகபிரசவத்தில் பிறந்த குழந்தை திடீர் சாவு: மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து மறியல்

Published On 2022-12-26 09:45 GMT   |   Update On 2022-12-26 09:45 GMT
  • நலமுடன் இருந்த குழந்தை, நேற்று திடீரென உயிரிழந்தது.
  • திடீரென அனைவரும் மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

ஓசூர்,

ஓசூர் அருகேயுள்ள பேகேபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ், கூலித் தொழிலாளி. இவரது மனைவி சத்யா (22).இவர்களுக்கு திருமணமாகி 1 வருடம் ஆகிறது.

இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சத்யா கடந்த வெள்ளிக்கிழமை ஓசூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அதிகாலை அவருக்கு சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

பிரசவத்தின்போது குழந்தை எளிதாக வெளியே வராததால், குழந்தையை டாக்டர்கள் கருவிகள் மூலம் வெளியே இழுத்து பிரசவம் பார்த்ததாகவும்.

இதில் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து குழந்தை, மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது.

நலமுடன் இருந்த குழந்தை, நேற்று திடீரென உயிரிழந்தது. இதனால் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் ஓசூர் அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து ஆவேசத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மருத்துவமனை நிர்வாகம் மற்றும் டாக்டர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் திடீரென அனைவரும் மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஓசூர் டவுன் போலீசார் மற்றும் தாசில்தார் கவாஸ்கர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். குழந்தை இறந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 

Tags:    

Similar News