உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி போலீஸ் நிலையத்தில் தீக்குளித்த வியாபாரி மீது தற்கொலை முயற்சி வழக்கு

Published On 2023-02-27 09:29 GMT   |   Update On 2023-02-27 09:29 GMT
  • முருகன் 3-வது மைலில் பிரியாணி மற்றும் சிக்கன் கடை நடத்தி வருகிறார்.
  • மன வேதனையில் முருகன் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்ததாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி டி.என்.பி. காலனியை சேர்ந்தவர் முருகன் (வயது32). இவர் 3-வது மைலில் பிரியாணி மற்றும் சிக்கன் கடை நடத்தி வருகிறார்.

தீக்குளிப்பு

நேற்று மாலை இவர் தென்பாகம் போலீஸ் நிலையம் முன்பு உடலில் மண்எண்ணை ஊற்றி திடீரென தீக்குளித்தார். உடனடியாக அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

10 சதவீத தீக்காயத்துடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறும் போது, முருகனின் அண்ணன் ஆவுடையப்பன். இவருக்கும் இவரது மனைவி சுப்புலட்சுமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

தகராறு

இந்நிலையில் சுப்புலட்சுமி தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். தன்னிடம் கூறாமல் மகளுக்கு திருமணம் நடத்தி வைத்ததால் ஆவுடையப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் வருத்தம் அடைந்தனர்.

இது தொடர்பாக ஆவுடையப்பன், சுப்புலட்சுமியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். நேற்று இது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இது தொடர்பாக புகாரின் பேரில் தென் பாகம் போலீசார் இருதரப்பினரையும் போலீஸ் நிலையம் வருமாறு அழைத்தனர். இதனால் ஏற்பட்ட மன வேதனையில் முருகன் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்ததாக கூறப்படு கிறது.

இந்நிலையில் இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் கங்கை நாத பாண்டியன், வியாபாரி முருகன் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

Similar News