உள்ளூர் செய்திகள்

ஸ்ரீவைகுண்டத்தில் 3 மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைப்பு: கார்-ஆட்டோ கண்ணாடிகள் உடைப்பு

Published On 2022-10-08 11:21 GMT   |   Update On 2022-10-08 11:21 GMT
  • நேற்று இரவு தங்கள் வீடுகள் முன்பு 3 மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு வழக்கம் போல தூங்க சென்றனர்.
  • அவர்களது 3 மோட்டார் சைக்கிள்களுக்கும் நேற்று நள்ளிரவு மர்மநபர்கள் தீ வைத்தனர்.

செய்துங்கநல்லூர்:

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு பிச்சனார் தோப்பு பகுதியில் முருகன், சக்திவேல், பேச்சு முத்து ஆகியோர் வசித்து வருகிறார்கள்.

இவர்கள் நேற்று இரவு தங்கள் வீடுகள் முன்பு 3 மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு வழக்கம் போல தூங்க சென்றனர்.

இந்நிலையில் அவர்களது 3 மோட்டார் சைக்கிள்களுக்கும் நேற்று நள்ளிரவு மர்மநபர்கள் தீ வைத்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள ஒரு வீடு மற்றும் சமுதாய கொடியும், மர்மநபர்களால் தீவைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அதே பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராக்களை உடைத்து சேதப்படுத்திய மர்மநபர்கள் அருகில் உள்ள மேலகோட்டைவாசல் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த நல்லபெருமாள் என்ற ராஜா என்பவரது லோடு ஆட்டோ மற்றும் ராமர், கணேசன் ஆகியோரது 2 கார்களின் கண்ணாடிகளையும் அடித்து உடைத்து உள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. மாயவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News