உள்ளூர் செய்திகள் (District)

சுருக்குமடி வலை பயன்படுத்த எதிர்ப்பு- 30 மீனவ கிராம மக்கள் கடற்கரையில் போராட்டம்

Published On 2022-07-09 07:41 GMT   |   Update On 2022-07-09 07:41 GMT
  • கடலூர் அருகே சாமியார்பேட்டை பகுதியில் 30 கிராம மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்துவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
  • இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மீனவ கிராமத்தினர் அறிவித்து இருந்தனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் தாழங்குடா, தேவனாம்பட்டினம், தைக்கால்தோணி துறை, சாமியார்பேட்டை உள்ளிட்ட 49 மீனவ கிராமங்கள் உள்ளது.

இங்குள்ள மீனவர்கள் விசைப்படகு, கட்டுமரம் மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடித்து வருகிறார்கள்.

இதற்கிடையில் கடலில் சுருக்குமடி வலையை பயன்படுத்துவதால் மீன்வளம் குறைகிறது என்று கூறி மாவட்ட நிர்வாகம் சுருக்குமடி வலைக்கு தடை விதித்துள்ளது. ஆனாலும் ஒரு சில மீனவ கிராம மக்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்துகின்றனர்.

இவர்களை கண்காணித்த மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களின் படகு மற்றும் மீன்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இதனிடையே கடலூர் அருகே சாமியார்பேட்டை பகுதியில் 30 கிராம மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்துவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மீனவ கிராமத்தினர் அறிவித்து இருந்தனர்.

அதன்படி இன்று மீனவர்கள் சாமியார்பேட்டை கடற்கரையில் கருப்பு கொடியுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் இதில் 30-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். அவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்பிடி தளம் வெறிச்சோடியது.

Tags:    

Similar News