உள்ளூர் செய்திகள் (District)

104.50 அடியை நெருங்கிய பவானிசாகர் அணை

Published On 2022-12-13 04:46 GMT   |   Update On 2022-12-13 04:46 GMT
  • பவானி ஆற்றின் கரையோரம் உள்ள கொடிவேரி, மேவாணி, ராக்கியாபாளையம், அடசப்பாள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
  • பவானி ஆற்றங்கரை விவரம் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதாலும், கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதாலும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.39 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,598 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி மட்டும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு பெற்று வருகிறது.

பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவான 105 அடியை எட்டும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அணையின் நீர்மட்டம் 104.50 அடியை எட்டியவுடன் அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பவானி ஆற்றின் கரையோரம் உள்ள கொடிவேரி, மேவாணி, ராக்கியாபாளையம், அடசப்பாள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். பவானி ஆற்றங்கரை விவரம் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் பவானி ஆற்றின் கரையோரங்களில் வருவாய்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டால் கொடிவேரி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News