தமிழ்நாடு (Tamil Nadu)

மீனவர்களுக்கு மொட்டை அடித்ததை விட லட்டு பிரச்சனைதான் பெரியதா? - சீமான் ஆவேசம்

Published On 2024-09-21 06:05 GMT   |   Update On 2024-09-21 06:05 GMT
  • நான் கருணாநிதியின் வாரிசும் அல்ல. எம்.ஜி.ஆரின் வாரிசு அல்ல.
  • ஒரே நாடு, ஒரே தேர்தல் நடக்கப்போவது கிடையாது.

சிவகங்கை:

சிவகங்கை சிவன் கோவில் அருகே நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:-

சுதந்திரத்திற்காக போராடிய வீரமங்கை வேலு நாச்சியாருக்கு சிவகங்கை அரண்மனை வாசலில் மட்டுமே சிலை உள்ளது. ஆனால் திராவிட கட்சி தலைவர்களுக்கு அனைத்து இடங்களிலும் சிலை வைத்துள்ளனர்.

மறைந்த கருணாநிதிக்கு ரூ.250 கோடியில் நினைவிடம் கட்டி உள்ளனர். ஆனால் வீரமங்கை வேலு நாச்சியாருக்கு நினைவு இடம் கோழிக்கூடு போல சிறிதாக உள்ளது.

நான் கருணாநிதியின் வாரிசும் அல்ல. எம்.ஜி.ஆரின் வாரிசு அல்ல. சாதாரண குடிமகனான நான் தமிழ் உணர்வுகளை தட்டியெழுப்பி 36 லட்சம் வாக்குகள் பெற்று, 3-வது பெரிய கட்சியாக வந்து உள்ளேன். நான் தான் புரட்சியாளர்.

என்னைப்போல் கொள்கைக்காக தனிக்கட்சி ஆரம்பித்து மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா போட்டியில் இருந்தால் அவர்களுக்கு 4 ஓட்டுகள் கூட கிடைத்திருக்காது.

லட்டில் மாட்டுக் கொழுப்பு தடவி இருப்பதாக புதிய பிரச்சனை கிளப்பி உள்ளனர். நான் கொழுப்பு தடவி இருந்தாலும் சாப்பிடுவேன். இல்லாவிட்டாலும் சாப்பிடுவேன். இதுவரை யாரும் உயிரிழக்கவில்லையே. இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை மொட்டை அடித்து அனுப்புகின்றனர். அது பிரச்சனையாக தெரியவில்லை. லட்டு தான் பிரச்சனையாக தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பத்தூரில் சீமான் நிருபர்களிடம் கூறுகையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் நடக்கப்போவது கிடையாது. மக்கள் பிரச்சனையை திசை திருப்புவதற்காக பா.ஜனதா இதனை கையில் எடுத்துள்ளது. பீகார், மேற்கு வங்காளத்தில் 7 கட்டமாக தேர்தல் நடத்தியவர்கள், இந்தியா முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடியாது என்றார்.

Tags:    

Similar News