உள்ளூர் செய்திகள்

கார் டயர் வெடித்து விபத்து- மாணவி பலி

Published On 2024-06-23 09:05 GMT   |   Update On 2024-06-23 09:05 GMT
  • வேலூர் அடுத்த மோட்டூர் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது.
  • விபத்தில் சிக்கி மாணவி இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

வேலூர்:

சென்னை நெற்குன்றத்தை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 19) ஈக்காட்டுத்தாங்களை சேர்ந்தவர் டிராவிட் (21). ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர்கள் அஸ்வதி (21) மற்றும் சக்தி (21).

இதில் விஷ்ணுவும், அஸ்வதியும் சென்னையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் 4 பேரும் திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலைக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை சென்னையில் இருந்து காரில் புறப்பட்டனர்.

வேலூர் அடுத்த மோட்டூர் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையில் தாறுமாறாக ஓடி தடுப்பு கம்பியில் மோதியது. இதில் கார் உருண்டு சென்று லாரியின் மீது மோதியது. காரின் முன் பகுதி முழுவதும் சேதமானது.

காரில் இருந்த இளம்பெண் உட்பட 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து விரிஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் சிக்கி இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஸ்வதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏலகிரிக்கு சுற்றுலா சென்ற போது விபத்தில் சிக்கி மாணவி இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News