உள்ளூர் செய்திகள் (District)

பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல்- எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published On 2023-04-02 07:53 GMT   |   Update On 2023-04-02 07:53 GMT
  • அ.தி.மு.க.வை எவராலும் சீண்டி பார்க்கவும் முடியாது, தொட்டுப்பார்க்கவும் முடியாது.
  • அ.தி.மு.க.வை அழிக்க பார்த்தால் அது கானல் நீராகத்தான் இருக்கும்.

சென்னையில் இருந்து சேலம் செல்லும் வழியில் விழுப்புரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. தொண்டர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நான் செயல்படுவேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கண்ட கனவை நனவாக்கி நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும்.

தி.மு.க. ஆட்சியில் அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போடப்பட்டு வருகிறது. அவைகளை எல்லாம் சட்ட ரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம்.

அ.தி.மு.க. பல்வேறு சோதனைகளை கடந்து வெற்றிப் பாதையில் பயணித்த ஒரு மாபெரும் கட்சி. எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை வென்றெடுப்போம். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அ.தி.மு.க. மக்கள் பணியில் தொடர்ந்து எப்போதும் இருக்கும்.

அ.தி.மு.க.வை யார் சீண்டினாலும் அவர்கள் தான் அழிந்து போவார்கள். அ.தி.மு.க. தொண்டன் உழைப்பால் உயர்ந்தவன். ஆண்டவனால் படைக்கப்பட்ட தொண்டன் அதிமுக தொண்டன்.

இந்தியாவில் எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால், மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள் என்றால் அது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தான். அவர்களுக்கு வாரிசுகள் கிடையாது. நம்மைத்தான் வாரிசுகளாக பார்த்தார்கள்.

அ.தி.மு.க.வை எவராலும் சீண்டி பார்க்கவும் முடியாது, தொட்டுப்பார்க்கவும் முடியாது. அ.தி.மு.க.வை அழிக்க பார்த்தால் அது கானல் நீராகத்தான் இருக்கும்.

அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியில் அமரும். வருகிற பாராளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் வரலாம். அதுதான் ஒரே நாடு ஒரே தேர்தல்.

அ.தி.மு.க.விற்கு விடிவு காலம் பிறக்கும். ஒளிமயமான எதிர்காலம் நம் கண்ணுக்கு முன்னால் தெரிகிறது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைய பாடுபடுவோம்.

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், விழுப்புரம் மாவட்டம், அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News