உள்ளூர் செய்திகள் (District)

பண்ருட்டி அருகே பயங்கர வெடி சத்தம்: வீடுகள் அதிர்ந்தன

Published On 2023-09-26 09:25 GMT   |   Update On 2023-09-26 09:25 GMT
  • பண்ருட்டி அருகே கிராமப் பகுதியில் திடீரென ஏற்பட்ட பயங்கரமான வெடி சத்தம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • தகவல் அறிந்த போலீசார், சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பண்ருட்டி:

பண்ருட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட நடுக்குப்பம், மேட்டுக்குப்பம், கீழக்குப்பம் கிராமங்கள் உள்ளன. இன்று பகல் 12 மணிக்கு இக்கிராமங்களில் பயங்கரமான வெடி சத்தம் கேட்டது. இதில் அப்பகுதியில் உள்ள வீடுகள் அனைத்தும் அதிர்ந்தன.

இதனால் அச்சமடைந்த கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியில் வந்து பார்த்தனர். அப்போது வானத்தில் ஜெட் விமானம் சென்றது போன்று தெரிந்தது. இதையடுத்து இளைஞர்கள் தங்களின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிராமத்தை சுற்றினர். வெடி சத்தத்திற்கான காரணம் ஏதும் தெரியவில்லை.

மேலும், வானத்தில் ஒரு ஹெலிகாப்டர் வட்டம் அடித்ததாகவும், சிறிது நேரம் கழித்தே பயங்கரமான வெடி சத்தம் வந்ததாகவும் விவசாய நிலங்களில் பணி செய்த தொழிலாளர்கள் கூறினார்கள். இதனால் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி வெடித்திருக்கலாம் என்றும் பொதுமக்கள் பேசி வருகின்றனர்.

இருந்த போதும் வீடுகள் அதிர்ந்ததற்கான காரணம் தெரியாமல் அப்பகுதி மக்கள் குழம்பி வருகின்றனர். இத்தகவல் அறிந்த போலீசார், சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பண்ருட்டி அருகே கிராமப் பகுதியில் திடீரென ஏற்பட்ட பயங்கரமான வெடி சத்தம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News