உள்ளூர் செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் மோதி அண்ணன், தம்பி பலி

Published On 2023-03-16 07:02 GMT   |   Update On 2023-03-16 07:02 GMT
  • புதுச்சேரியிலிருந்து ஈரோட்டிற்கு சென்ற அரசு பஸ் உளுந்தூர்பேட்டைக்குள் செல்வதற்காக திரும்பியது.
  • எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

உளுந்தூர்பேட்டை:

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விக்னேஷ்வரன் (வயது 24), விஜய்பழனி (22). 2 பேரும் அண்ணன், தம்பி. இவர்கள் 2 பேரும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகேயுள்ள தலப்பாக்கட்டி பிரியாணி கடையில் வேலை செய்து வந்தனர்.

இவர்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்று இன்று பணிக்கு மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டைக்கு திரும்பினர். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிக்கு 100 மீட்டர் தொலைவில் சேந்தநாடு குறுக்குச் சாலையில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது புதுச்சேரியிலிருந்து ஈரோட்டிற்கு சென்ற அரசு பஸ் உளுந்தூர்பேட்டைக்குள் செல்வதற்காக திரும்பியது. எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த அண்ணன், தம்பி 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயங்களுடன் சாலையில் துடித்தனர்.

இவர்களை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 2 பேரும் இறந்துவிட்டதாக கூறினார்கள். தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி 2 பேரும் பணி செய்யும் ஓட்டலுக்கு அருகே சாலை விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News