உள்ளூர் செய்திகள்

பா.ஜ.க. நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா சென்னையில் தங்கி போலீசில் கையெழுத்திட வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2023-07-14 08:41 GMT   |   Update On 2023-07-14 08:41 GMT
  • மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து, சென்னையில் வசித்த எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்தனர்.
  • ஜாமின் நிபந்தனையை மாற்றி அமைக்குமாறு மதுரை ஐகோர்ட்டில் எஸ்.ஜி.சூர்யா மனு தாக்கல் செய்தார்.

மதுரை:

தமிழக பா.ஜ.க. செயலாளர் எஸ்.ஜி.சூர்யா. இவர் கடந்த 7-ந்தேதி தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் மதுரை பெண்ணாடம் பேரூராட்சி 12-வது வார்டு உறுப்பினர் விஸ்வநாதன், மலம் கலந்த நீரில் தூய்மை பணியாளரை வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தியதாகவும், இதனால் தூய்மை பணியாளர் மூச்சுத்திணறி இறந்ததால் ஒருவிதமான பதற்றம் நிலவுவதாக கருத்து தெரிவித்து இருந்தார்.

மேலும் இதனை மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டுகொள்ளாமல் மவுனம் காக்கிறார் எனவும் கூறியிருந்தார். இதற்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து, சென்னையில் வசித்த எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்தனர். அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

பின்னர் அவருக்கு கோர்ட்டு ஜாமின் வழங்கியது. தற்போது இந்த ஜாமின் நிபந்தனையை மாற்றி அமைக்குமாறு மதுரை ஐகோர்ட்டில் எஸ்.ஜி.சூர்யா மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-

எனது குடும்பத்தினர் சென்னையில் உள்ளனர். வாய் பேசமுடியாத தாய், 100 வயதான தாத்தா உள்ளனர். அவர்களை நான் தான் கவனிக்க வேண்டும். எனவே, சென்னையிலுள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடும் வகையில் ஜாமின் நிபந்தனையை மாற்றம் செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், நிபந்தனை ஜாமினில் உள்ள எஸ்.ஜி.சூர்யா சென்னை சைபர் கிரைம் போலீசில் நாள்தோறும் காலை கையெழுத்து இட அனுமதி வழங்கி நீதிபதி செய்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News