உள்ளூர் செய்திகள்

ஓசூரில் வாலிபர் வெட்டிக்கொலை: பாதுகாப்பு வழங்காத போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் சஸ்பெண்டு

Published On 2023-05-16 07:47 GMT   |   Update On 2023-05-16 07:47 GMT
  • 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
  • போலீசார் அழைத்து வந்து விசாரித்த போது, தனது மகன் மோகன் பாபுவை கொலை செய்ததற்கு பழி தீர்க்கும் வகையில் தான், தான் மத்திகிரியை சேர்ந்த சசி என்பவர் மூலம் கொலை செய்ததாக கூறியுள்ளார்.

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் கடந்த 12-ந்தேதி, பெரியார் நகர் அருகே ஒரு ஸ்வீட்ஸ் கடை பகுதியில், மத்திகிரி அருகே சொப்பட்டி கிராமத்தை சேர்ந்த திலக் (24) என்ற வாலிபர், அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இது சம்பந்தமாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணைமேற்கொண்டு வருகின்றனர். மேலும், 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட திலக், அவரது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து சொப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மோகன் பாபு என்பவரை வெட்டி கொலை செய்து விட்டனர். இது சம்பந்தமாக குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்து விட்டனர்.

இந்நிலையில், திலக் கொலை தொடர்பாக, மோகன் பாபுவின் தந்தை திம்மராயப்பா என்பவரை சந்தேகத்தின் பேரில் ஓசூர் டவுன் போலீசார் அழைத்து வந்து விசாரித்த போது, தனது மகன் மோகன் பாபுவை கொலை செய்ததற்கு பழி தீர்க்கும் வகையில் தான், தான் மத்திகிரியை சேர்ந்த சசி என்பவர் மூலம் கொலை செய்ததாக கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில், திலக்கிற்கு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று கூறி சேலம் சரக டி.ஐ.ஜி உத்தரவின் பேரில், மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசு ஆகிய இருவரையும் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. சரோஜ் குமார் தாகூர், சஸ்பெண்டு செய்துள்ளார்.

Tags:    

Similar News