உள்ளூர் செய்திகள்

மனைவியை கொன்று விட்டு ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்த கணவர்- குடும்ப தகராறில் ஆத்திரம்

Published On 2023-05-10 10:00 GMT   |   Update On 2023-05-10 10:00 GMT
  • பிஜூவின் பிணத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  • கணவன், மனைவி இருவரும் இறந்து விட்டதால் அவர்களின் இரண்டு குழந்தைகளும் இப்போது பெற்றோரை இழந்து அனாதையாகி உள்ளனர்.

திருவனந்தபுரம்:

களியக்காவிளையில் கேரள எல்லையான காயங்குளம் பகுதியை சேர்ந்தவர் பிஜூ (வயது 39). இவருக்கு லவ்லி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

பிஜூவுடன் அவரது பெற்றோரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். பிஜூவுக்கும் அவரது மனைவி லவ்லிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும். அப்போது இருவரும் வாய்தகராறில் ஈடுபடுவார்கள். நேற்று இரவும் இதுபோல இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் திட்டி சத்தம் போட்டனர்.

சிறிது நேரத்தில் பிஜூவின் படுக்கை அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. உடனே பிஜூவின் தந்தையும், தாயும் அங்கே ஓடி சென்றனர். அப்போது பிஜூ கையில் கத்தியுடன் அறையில் இருந்து வெளியே ஓடி வந்தார்.

உடனே பிஜூவின் பெற்றோர் படுக்கை அறைக்குள் சென்று பார்த்த போது அங்கு ரத்த வெள்ளத்தில் லவ்லி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் லவ்லியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், லவ்லி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குடும்ப தகராறு காரணமாக பிஜூ மனைவி லவ்லியை கத்தியால் குத்தி கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து லவ்லியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து லவ்லியை கொலை செய்த அவரது கணவரை தேடி வந்தனர்.

இந்தநிலையில் காயங்குளம் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக அந்த பகுதியில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர்.

இதில் அங்கு பிணமாக கிடந்தவர் மனைவியை கொலை செய்த பிஜூ என தெரியவந்தது. பிஜூ மனைவியை குத்தி கொலை செய்த பின்னர், வீட்டில் இருந்து வெளியே வந்து அருகில் உள்ள ரெயில் தண்டவாளம் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து பிஜூவின் பிணத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவன், மனைவி இருவரும் இறந்து விட்டதால் அவர்களின் இரண்டு குழந்தைகளும் இப்போது பெற்றோரை இழந்து அனாதையாகி உள்ளனர். இதுஅந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News