உள்ளூர் செய்திகள் (District)

கொடைக்கானலில் குவிந்த கேரள சுற்றுலா பயணிகள்

Published On 2024-10-20 04:35 GMT   |   Update On 2024-10-20 04:35 GMT
  • சாரல் மழை மற்றும் பனி மூட்டத்தின் காரணமாக கொடைக்கானலில் காற்றின் ஈரப்பதம் அதிகரித்து காணப்படுகிறது.
  • கேரளாவில் இருந்து அதிக அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது கொடைக்கானலில் சாரல்மழை பெய்தது. மேலும் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு அடிக்கடி சாரல் மழை பெய்தது. நகர்பகுதியில் தரை இறங்கும் மேகக்கூட்டம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. மாறுபட்ட வானிலை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஏரியில் நனைந்தபடி படகு சவாரி செய்தும், குடை பிடித்தபடியே ஏரிச்சாலையில் நடந்து சென்றும் பொழுதை கழித்து வருகின்றனர். இது மட்டுமின்றி பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார்பூங்கா, கோக்கர்ஸ் வாக், மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் ஆகிய இடங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.

மேலும் ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள், படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். சாரல் மழை மற்றும் பனி மூட்டத்தின் காரணமாக கொடைக்கானலில் காற்றின் ஈரப்பதம் அதிகரித்து காணப்படுகிறது. கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகள் இதை ஆனந்தமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் மன்னவனூர், பூண்டி கிளாவரை உள்ளிட்ட மேல்மலை கிராமங்களுக்கும் படையெடுத்த சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

குறிப்பாக கேரளாவில் இருந்து அதிக அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். அவர்கள் மலைப்பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ள சுற்றுலா இடங்களை கண்டு ரசித்தனர். மேலும் ஆங்காங்கே உருவாகி உள்ள புதிய அருவிகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் ஓட்டல் உரிமையாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News