உள்ளூர் செய்திகள்
மாங்காய் பறிக்க முயன்றவர் மாடியில் இருந்து தவறி விழுந்து பலி
- முகமது ரியாஸ்தீன் தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில் மாங்காய் பறிக்க வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றார்.
- மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கொளத்தூர்:
மாதவரம் பொன்னியம்மன்மேடு தணிகாசலம் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் முகமது ரியாஸ்தீன் (வயது57). இவர் மணலியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து வந்தார். மேலும் அருகில் உள்ள பள்ளிவாசலில் பொருளாளராக இருந்து வந்தார். இவரது மனைவி ரஹிமா கவுசர். இவர் பெரம்பூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.
இந்த நிலையில் முகமது ரியாஸ்தீன் தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில் மாங்காய் பறிக்க வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றார். அங்கிருந்தபடி மரத்தின் கிளைகளை இழுத்து அவர் மாங்காய் பறித்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக முகமது ரியாஸ்தீன் நிலை தடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
இது குறித்து மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.