மணவாளநகர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
- பின்னர் மாலை பாக்கியவதி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
- பாக்கியவதி மணவாளநகர் போலீசில் புகார் கொடுத்தார்.
மணவாளநகர்:
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் சாரதாம்பாள் நகரில் வசிப்பவர் பாக்கியவதி. இவர் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரியாக வேலை செய்கிறார். இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் காலை கணவன் மனைவி இருவரும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வேலைக்கு சென்றனர். பின்னர் மாலை பாக்கியவதி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அதில் வைத்திருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடியது தெரிய வந்தது.
இதுகுறித்து பாக்கியவதி மணவாளநகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தபட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.