உள்ளூர் செய்திகள் (District)

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்க நடவடிக்கை- அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தல்

Published On 2024-10-06 02:53 GMT   |   Update On 2024-10-06 02:53 GMT
  • தமிழகத்தில் மின்சார தேவை, மின் வினியோகத்தில் எந்தவித இடைவெளியும் இல்லை.
  • மாநிலம் முழுவதும் தடையில்லா, சீரான மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.

சென்னை:

தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இயங்கும் மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, நேற்று ஆய்வு மேற்கொண்டார். மின்னகத்தில் பதிவான மின்சாரம் தொடர்பாக பொதுமக்களின் புகார்கள், அதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மின் தடை ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி, அதற்கான காரணத்தை கண்டறிந்து உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் என்றும், பொதுமக்களிடம் பெறப்படும் புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தடையில்லா, சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர், மேலாண்மை இயக்குனர் நந்தகுமார், தமிழ்நாடு பசுமை எரிசக்தி மேலாண்மை இயக்குனர் அனீஷ்சேகர், இணை மேலாண்மை இயக்குனர் விஷூ மகாஜன் உள்பட பலர் இருந்தனர்.

இதற்கிடையில் தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மின்னகம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 28 லட்சத்து 69 ஆயிரத்து 876 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 28 லட்சத்து 64 ஆயிரத்து 215 புகார்கள் (99.80 சதவீதம்) மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மின்சார தேவை, மின் வினியோகத்தில் எந்தவித இடைவெளியும் இல்லை. மாநிலம் முழுவதும் தடையில்லா, சீரான மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.

எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைளையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் எடுத்துள்ளது. மின் வினியோகம் சார்ந்த குறைபாடுகளை சரி செய்ய 9498794987 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News