உள்ளூர் செய்திகள்
ஈரோட்டில் மாநில சிறுபான்மையினர் ஆணையக்குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி அளித்த போது எடுத்த படம்.

தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற முயல்கிறது- பீட்டர் அல்போன்ஸ்

Published On 2022-11-25 08:57 GMT   |   Update On 2022-11-25 08:57 GMT
  • இந்தியாவில் குஜராத்தை போல தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தை மாற்ற பா.ஜ.க. முயற்சி செய்கிறது.
  • கொங்கு மண்டலத்தில் சமூக பதட்டத்தை உண்டாக்கினால் தொழில் முடங்கப்படும்.

ஈரோடு:

ஈரோட்டில் இன்று தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உலகம் முழுவதும் தமிழ் மொழியின் தொன்மையை தெரியப்படுத்தியதில் சிறுபான்மை மக்களின் பங்கு மகத்தானது. உதாரணமாக திருவாசகத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த பெருமை ஜி.யு.போப் என்று சொல்லக்கூடிய அந்த மிகப்பெரிய தமிழ் அறிஞரைசாரும். திருக்குறளை மொழிபெயர்த்த பெருமை அவர்களை சாரும். சர்தார் வல்லபாய் பட்டேலுக்கும், டாக்டர்.அம்பேத்காருக்கும் பா.ஜ.க.வுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

இதேப்போல் தமிழ் மொழிக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும், தமிழினத்திற்கும் பா.ஜ.க.வுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வல்லபாய் பட்டேல், அம்பேத்கரை தங்களுக்கு நெருக்கமானவர்கள் என்று தங்களை காட்டிக் கொள்வதற்கும், தமிழ் மொழி தங்களுக்கு நெருக்கமான மொழி என்று அடையாளம் படுத்துவதன் மூலமாக அவர்கள் (பா.ஜ.க) தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கிறார்கள்.

ஆனால் நம் தமிழர்கள் விழித்து கொண்டார்கள். தமிழர்களை அவர்களால் ஏமாற்ற முடியாது.

இங்கே இருக்கின்ற சில கட்சிகள் அதிலும் அ.தி.மு.க. தனது திராவிட என்ற அடையாளத்தை தொலைத்து விட்டு தங்கள் இருப்புக்கான நியாயத்தை தொலைத்து விட்டு பா.ஜ.க.விடம் அடகு வைத்து விட்டது. ஜெயலலிதா அவர்கள் சில கொள்கையில் உறுதியாக இருந்தார். அதையெல்லாம் தொலைத்து விட்டு இன்று ஒட்டு மொத்தமாக பா.ஜ.க.வுக்கு விலை போய் இருக்கிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் குஜராத்தை போல தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தை மாற்ற பா.ஜ.க. முயற்சி செய்கிறது. கொங்கு மண்டலத்தில் சமூக பதட்டத்தை உண்டாக்கினால் தொழில் முடங்கப்படும். அதனால் தமிழ்நாடு பின்னுக்கு தள்ளப்படும். அதன் மூலம் வருகின்ற அரசியல் ஆதாயத்தை வைத்து சட்ட ஒழுங்கு கெட்டு விட்டது என்று கிளப்ப நினைக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உள்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News