உள்ளூர் செய்திகள் (District)

வடசேரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தாய்-மகன் மீது அறுந்து விழுந்த மின்வயர்

Published On 2023-07-19 10:26 GMT   |   Update On 2023-07-19 10:26 GMT
  • டெம்போவின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த தாய் மற்றும் மகன் மீது மின் வயர் விழுந்தது.
  • மின்வயர் அறுந்து விழுந்த தகவல் மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

நாகர்கோவில்:

நாகர்கோவில் புத்தேரியில் இருந்து வடசேரி நோக்கி டெம்போ ஒன்று இன்று காலை வந்து கொண்டிருந்தது. வடசேரியை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், டெம்போவின் மேல் பகுதி அந்த வழியாக சென்ற மின் வயர் மீது உரசியது.

இதில் மின் வயர் அறுந்தது. டெம்போவின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த தாய் மற்றும் மகன் மீது மின் வயர் விழுந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் கூச்சலிட்டனர்.

மின்வயர் அறுந்து விழுந்தபோது தீப்பொறியும் கிளம்பியது.

இதனால் அதிர்ச்சியடைந்த தாய்-மகன் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து குதித்தனர். அவர்களது இருசக்கர வாகனம் அந்தப் பகுதியில் உள்ள கழிவு நீர் ஓடையின் மீது விழுந்தது. அறுந்து விழுந்த மின்வயரில் தொடர்ந்து மின்சாரம் வந்து கொண்டிருந்தது.

இதனைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரோட்டில் மின் வயர் அறுந்து கிடந்ததையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காலை நேரம் என்பதால் ஏராளமான பொது மக்களும் திரண்டனர்.

மின்வயர் அறுந்து விழுந்த தகவல் மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து மின் இணைப்பை துண்டித்தனர். இதைத்தொடர்ந்து அந்த வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டன.

பின்னர் போக்குவரத்து சீரானது. அறுந்து விழுந்த மின் வயரை சரி செய்யும் பணியில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் வடசேரி போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். மின்வயரை அறுத்துவிட்டு நிற்காமல் சென்ற டெம்போவை போலீசார் தேடி வருகிறார்கள். மின்வயர் மேலே அறுந்து விழுந்ததும் தாய்-மகன் இருவரும் இருசக்கர வாகனத்தில் இருந்து குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் வடசேரியில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News