உள்ளூர் செய்திகள்

சேலத்தில் நாளை மறுநாள் சுற்றுப்பயணம்- சசிகலாவை வரவேற்க தயாராகும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்

Published On 2022-09-10 07:20 GMT   |   Update On 2022-09-10 07:20 GMT
  • சேலத்திற்கு வருகை தரும் சசிகலாவிற்கு நாளை மறுநாள் மதியம் 3 மணிக்கு தலைவாசலில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
  • அ.தி.மு.க.வில் ஏற்கனவே கட்சி தலைமைக்கான போட்டியில் குழப்பம் நிலவி வரும் நிலையில் சசிகலாவின் சுற்றுப்பயணம் தொண்டர்களிடையே மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம்:

அ.தி.மு.க.வில் தலைமை பொறுப்பை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடையே கடும் போட்டி ஏற்பட்டது.

இதுதொடர்பாக கோர்ட்டில் தற்போது மாறி மாறி வழக்குகளும் தீர்ப்புகளும் வந்த நிலையில் அ.தி.மு.க தலைமையை கைப்பற்ற சசிகலா அதிரடியாக வியூகம் அமைத்து தமிழக முழுவதும் தீவிர சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நாளை மறுநாள் (திங்கட்கிழமை) சசிகலா சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நாளை மறுநாள் (12-ந் தேதி) காலை தஞ்சையிலிருந்து திருவையாறு, திருமானூர், கீழப்பலூர், அரியலூர், பெரம்பலூர் வழியாக சேலம் மாவட்டம் வீரகனூர் வருகிறார். அங்கிருந்து தலைவாசல் வரும் அவர் மதியம் 2.30 மணியளவில் தனது பயணத்தை தொடங்குகிறார்.

தலைவாசலில் அவருக்கு தொண்டர்கள் திரண்டு வரவேற்பு அளிக்கின்றனர்.

தொடர்ந்து ஆத்தூர் பஸ் நிலையம், புத்திரகவுண்டன் பாளையம், வாழப்பாடி பஸ் நிலையம் அருகில் தொண்டர்களை சந்திக்கிறார். பின்னர் சேலம் 4 ரோடு பகுதிக்கு வரும் அவர் அண்ணா பூங்காவில் உள்ள எம்.ஜி.ஆர் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிக்கிறார்.

தாதகாபட்டி, சீலநாயக்கன்பட்டி, பைபாஸ் ரோடு சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் கட்சி தொண்டர்களையும் பொதுமக்களையும் நேரில் சந்திக்கிறார்.

13-ந் தேதி பிற்பகல் 3 மணியளவில் அரியானூரில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அரியானூரிலிருந்து மகுடஞ்சாவடி, சங்ககரி-எடப்பாடி பிரிவு, நாமக்கல் மாவட்டம் வெப்படை, பள்ளிப்பாளையம் பகுதிகளில் கட்சி தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திக்கிறார்.

பின்பு அவர் ஈரோடு மாவட்டத்துக்கு செல்கிறார்.

முன்னதாக சென்னையில் இருந்து கார் மூலம் ஆத்தூர் வழியாக சேலம் வரும் சசிகலாவுக்கு ஆங்காங்கே பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஓ.பி.எஸ். ஆதரவாளர்களும், சசிகலா ஆதரவாளர்களும் தயாராகி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் அ.தி.மு.க.வின் கோட்டை என்று கருதப்படுவதால் ஜெயலலிதா விசுவாசிகள் தன்னை சந்திப்பார்கள் என்று சசிகலா நம்புகிறார்.

இதனிடையே எடப்பாடி பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க முக்கிய பிரமுகர் சுரேஷ் தலைமையில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த வரவேற்பில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களும் பங்கேற்க உள்ளதாகவும் தெரிகிறது.

சேலத்திற்கு வருகை தரும் சசிகலாவிற்கு நாளை மறுநாள் மதியம் 3 மணிக்கு தலைவாசலில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அ.தி.மு.க.வில் ஏற்கனவே கட்சி தலைமைக்கான போட்டியில் குழப்பம் நிலவி வரும் நிலையில் சசிகலாவின் சுற்றுப்பயணம் தொண்டர்களிடையே மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதே வேளையில் அ.தி.மு.க.வில் எந்த பிரச்சினையும் இல்லை, எடப்பாடி பழனிசாமியின் பின்னால் தொண்டர்கள் நிற்கிறார்கள் என்று அவரது ஆதரவாளர்களும், சேலம் மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் கூறியுள்ளனர்.

மேலும் சேலம் மாவட்டத்துக்கு வரும் சசிகலாவை அ.தி.மு.க.வினர் சந்திக்காமல் இருக்கவும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நிர்வாகிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சசிகலாவின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் உற்று நோக்கும் வகையில் எடப்பாடி ஆதரவாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

சசிகலாவை யார் யார் சந்திக்கிறார்கள் அவருக்கு எந்த பகுதியில் அதிக அளவில் வரவேற்பு அளிக்கப்படுகிறது என்பது குறித்து ரகசியமாக கண்காணிக்க ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News