கும்மிடிப்பூண்டி தொகுதியில் சசிகலா 2-ந்தேதி சுற்றுப்பயணம்
- பல்வேறு தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சசிகலா வருகிற 2-ந்தேதி கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு செல்கிறார்.
- சசிகலா பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், ஊத்துக்கோட்டை பேரூராட்சி ஆகிய பகுதிகளில் கழக தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திக்கிறார்.
சென்னை:
சசிகலா கடந்த ஜூன் மாதம் முதல் சட்டமன்ற வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
பல்வேறு தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவர் வருகிற 2-ந்தேதி கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு செல்கிறார்.
இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரின் முகாம் அலுவலகம் என்ற பெயரில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கை வருமாறு:-
தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றிடவும், தி.மு.க. தலைமையிலான ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு தோலுரித்து காட்டிடவும், பெண்ணினத்தின் பாதுகாப்பை பேணிக் காத்திடவும் சசிகலா பயணத்தை தொடர்ந்து மேற்கொள்கிறார்.
வருகிற 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று மதியம் 2 மணிக்கு தியாகராஜ நகர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு கோயம்பேடு பாலம், மாதவரம் ரவுண்டானா, செங்குன்றம், பாடியநல்லூர் வழியாக கன்னிகைப்பேர் சென்றடைந்து, அங்கிருந்து தனது புரட்சிப் பயணத்தை தொடங்கும் சசிகலா பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், ஊத்துக்கோட்டை பேரூராட்சி ஆகிய பகுதிகளில் கழக தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திக்கிறார்.
இந்த பயணத்தில் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக தொண்டர்கள், தாய்மார்கள், இளம் தலைமுறையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஜாதி, மத, பேதமின்றி திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.