உள்ளூர் செய்திகள்

நண்பனுக்காக டீக்கடைக்காரரை அடித்து கொன்றோம்- கைதான 3 பேர் வாக்குமூலம்

Published On 2022-06-17 10:37 GMT   |   Update On 2022-06-17 10:37 GMT
  • போலீசாரிடம் சிக்காமல் இருக்க கேரளாவுக்கு தப்பிஓட முயன்றபோது சிக்கிகொண்டோம் என கூறினர்.
  • இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து தப்பி ஓடிய ஜெகதீசை தேடி வருகின்றனர்.

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள காமயகவுண்டன்பட்டி கிழக்குவீதியை சேர்ந்தவர் அழகுபகவதி(42). டீக்கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு மீனா(35) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அழகுபகவதி கருப்புசாமி கோவில் தெருவில் மர்மமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அழகுபகவதியின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை வைத்து விசாரித்ததில் கொலை நடந்த அன்று அவருக்கு போன் செய்த 3 பேரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்தனர். காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த பாலமுருகன்(27), சிவசக்தி(34), சதீஸ்குமார்(26) ஆகிய 3 பேரும் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்ததால் அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் அழகுபகவதியை கொலை செய்ததை ஒத்துக்கொண்டனர். இதுகுறித்து அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,

நாங்கள் 3 பேரும் கூலிவேலை பார்த்து வருகிறோம். எங்களது நண்பர் ஜெகதீஸ் என்பவரும் உடன் வேலை பார்த்து வருகிறார். அவருக்கும், அழகுபகவதியின் மனைவியான மீனாவுக்கும் பல ஆண்டுகளாக பழக்கம் இருந்து வருகிறது. இதுகுறித்து அறிந்ததும் அழகுபகவதி 2 பேரையும் கண்டித்தார். ஜெகதீசை கடுமையான வார்த்தைகளால் திட்டியதால் அவர் வேதனையில் இருந்தார். இதுகுறித்து எங்களிடம் கூறியபோது,

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக உள்ள அழகுபகவதியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். அதன்படி மதுபழக்கத்திற்கு அடிமையான அவரை சம்பவத்தன்று கருப்புசாமி கோவில் அருகே மதுகுடிக்க வருமாறு அழைத்தோம். அவருக்கு அதிகளவில் மதுவை ஊற்றிகொடுத்தோம். போதை தலைக்கேறியபோது அவரை மண்வெட்டிக்கு பயன்படுத்தும் கைப்பிடியால் அடித்து கொன்றோம்.

போலீசாரிடம் சிக்காமல் இருக்க கேரளாவுக்கு தப்பிஓட முயன்றபோது சிக்கிகொண்டோம் என்றனர். இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து தப்பி ஓடிய ஜெகதீசை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News