உள்ளூர் செய்திகள்

தெங்கம்புதூர் அருகே சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் திருடிய 3 பேர் கைது

Published On 2023-05-11 07:48 GMT   |   Update On 2023-05-11 07:48 GMT
  • சொந்த ஊரான தெங்கம்புதூர் சாஸ்தான் கோவில் விளை பகுதியில் கல்லறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
  • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

நாகர்கோவில்:

தெங்கம்புதூர் அருகே உள்ள சாஸ்தான் கோவில் விளை பகுதியை சேர்ந்தவர் சரவண முருகன் (வயது 61), இவர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். சரவண முருகன் தற்போது பாளையங்கோட்டை தியாகராஜ நகர் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு சரவண முருகனின் தந்தை தானு இறந்துவிட்டார்.

இதையடுத்து சொந்த ஊரான தெங்கம்புதூர் சாஸ்தான் கோவில் விளை பகுதியில் கல்லறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதை பார்ப்பதற்காக சரவண முருகன் ஊருக்கு வந்திருந்தார். இங்குள்ள வீட்டில் சரவண முருகன் இருந்தார்.

வீட்டின் பின்பகுதியில் குளித்துக்கொண்டிருந்த போது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் அவரது பேக்கில் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணம் பர்சில் இருந்து ரூ.4,300 மற்றும் ஏ.டி.எம். கார்டு, பான் கார்டு, ஆதார் கார்டு மற்றும் வீட்டில் இருந்த குத்துவிளக்குகளை திருடி சென்றனர்.

இதுகுறித்து சரவண முருகன் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தியபோது கொள்ளையில் ஈடுபட்டது வெள்ளாடிச்சிவிளை பகுதியை சேர்ந்த மன்னன் (வயது 21), ரஞ்சித்குமார் (22) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். வெள்ளாடிச்சி விளை பகுதியில் இருந்த மன்னன், ரஞ்சித்குமார் மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள்.

இதில் மன்னன், ரஞ்சித்குமார் இருவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 17 வயது சிறுவனை சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Tags:    

Similar News