உள்ளூர் செய்திகள் (District)

ஊட்டி அருகே 100 அடி பள்ளத்தில் சுற்றுலா கார் கவிழ்ந்து விபத்து- 5 பேர் காயம்

Published On 2023-04-10 04:53 GMT   |   Update On 2023-04-10 04:53 GMT
  • நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து விட்டு நேற்று மீண்டும் ஊர் திரும்பினர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஊட்டி:

சென்னை மதுராந்தகத்தை சேர்ந்தவர்கள் அருணகிரி(45), சம்பத்(40), செந்தில்(48), சத்தியா(35), பூவனம்(45). உறவினர்களான இவர்கள் 5 பேரும் விடுமுறையையொட்டி சில தினங்களுக்கு முன்பு நீலகிரிக்கு சுற்றுலாவுக்கு வந்தனர்.

பின்னர் நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து விட்டு நேற்று மீண்டும் ஊர் திரும்பினர். இவர்களது கார் ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக கார் நிலைதடுமாறி, சாலையோரத்தில் இருந்த 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த 5 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

இதனால் காரில் இருந்தவர்கள் அலறி சத்தம் போட்டனர். இவர்களது சத்தம் கேட்டு அந்த வழியாக வந்த தனியார் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் மருத்துவர்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு பள்ளத்தில் இறங்கி விபத்தில் சிக்கிய வேனில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

இதில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு விபத்தில் சிக்கிய 5 பேரும் மீட்கப்பட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விபத்தில் சிக்கியவர்களை மீட்ட ஆம்புலன்ஸ் வாகன டிரைவர்கள், மருத்துவருக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News