உள்ளூர் செய்திகள்

வேலூரில் பைக், ஜீப் அகற்றாமல் சாலை அமைத்த மாநகராட்சி உதவி என்ஜினீயர் சஸ்பெண்டு

Published On 2022-07-06 09:00 GMT   |   Update On 2022-07-06 09:00 GMT
  • வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகிறது.
  • சாய்நாதபுரம் பொன்னியம்மன் கோவில் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் டயர்கள் புதையும்படி சாலை அமைக்கப்பட்டது.

வேலூர்:

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகிறது.

இதில் பேரி காளியம்மன் கோவில் பகுதியில் பழுதாகி நிறுத்தப்பட்ட பைக்கை அகற்றாமல் அதன் டயர்கள் மேல் சிமெண்ட் கலவைகள் பதிந்தவாறு சாலை போடப்பட்டது.

இதே போல சாய்நாதபுரம் பொன்னியம்மன் கோவில் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் டயர்கள் புதையும்படி சாலை அமைக்கப்பட்டது.

இது குறித்து வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவ இடத்தில் மேயர் சுஜாதா ஆனந்த குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். பைக் மற்றும் ஜூப்பை அகற்றிவிட்டு அங்கு சாலை அமைக்க உத்தரவிட்டனர்.

இந்த 2 பணிகளுக்கும் பொறுப்பாளராக இருந்த 3-வது மண்டல உதவி என்ஜினியர் பழனி சஸ்பெண்டு செய்யட்டுள்ளார். சத்துவாச்சாரி கணபதி நகர் பூங்கா அருகே சாலையில் நடு பகுதியில் மின் கம்பம் அமைந்துள்ளது. அதை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதி குறித்து தெரியாதவர்கள் யாராவது இரவு நேரத்தில் பைக்கில் வந்தால் அவர்கள் நேரடியாக மின்கம்பத்தில் மோதி பெரும் விபத்து நேரிடும் அபாயம் உள்ளது.

இதேபோல பல இடங்களில் மின் கம்பங்கள் அப்புறப்படுத்தாமல் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமில்லாமல் இந்த பணியை செய்த தனியார் நிறுவனங்களுக்கும் கடும் அபராதம் விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

வேலூர் மாநகராட்சியில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை கண்காணிக்க தனியார் நிறுவனம் சார்பில் ஓய்வு பெற்ற என்ஜினியர்களைக் கொண்ட திட்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும்.ஆனால் தற்போது நடந்த சாலை பணிகளை பார்க்கும்போது இவர்கள் எந்த அளவுக்கு கண்காணித்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த திட்ட கண்காணிப்பு குழு கலைக்கப்பட்டு புதிய ஆட்களை நியமிக்க தனியார் நிறுவனத்திற்கு கமிஷனர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மாநகராட்சி பகுதியில் மின் கம்பங்களை அகற்றாமல் சாலை போடப்பட்டுள்ளது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். அவற்றை அகற்றவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News