உள்ளூர் செய்திகள்

பெண்ணை காப்பாற்ற கட்டுவிரியன் பாம்புடன் போராடிய பூனை முயற்சி தோற்றதால் பெண் பலி

Published On 2024-09-19 07:31 GMT   |   Update On 2024-09-19 07:31 GMT
  • சாந்தி படுத்திருந்த அறைக்குள் பாம்பு புகுந்தது. உடனே பூனை, பாம்பை எதிர்த்து போராடியது.
  • பூனையை பார்த்து பாம்பு சீற வர, பூனை அதனை தடுக்க முயன்றது.

கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் ரோடு நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி சாந்தி (வயது 58). இவர்களது மகன் சந்தோஷ், பிரிண்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

ரவி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். சாந்தி தனது மகனுடன் வசித்து வந்தார். மகன் வேலைக்கு சென்ற பிறகு சாந்தி வீட்டில் தனியாக இருப்பார். இதனால் நேரம் போக வேண்டும் என்பதற்காக வீட்டில் ஒரு பூனையை வளர்த்து வந்தார். பூனைக்கு உணவு வைப்பது, அதனுடன் கொஞ்சுவது என அவர் நேரத்தை செலவிட்டு வந்தார்.

இந்தநிலையில் இரவில் சாந்தி ஒரு அறையிலும், அவரது மகன் மற்றொரு அறையிலும் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தனர்.

அப்போது கட்டுவிரியன் பாம்பு ஒன்று அவர்களது வீட்டுக்குள் புகுந்தது. அந்த பாம்பை பார்த்ததும் அதனை வீட்டுக்குள் வர விடாமல் பூனை தடுத்தது. ஆனால் பாம்பு தொடர்ந்து வீட்டுக்குள் நுழைந்தது.

சாந்தி படுத்திருந்த அறைக்குள் பாம்பு புகுந்தது. உடனே பூனை, பாம்பை எதிர்த்து போராடியது. பூனையை பார்த்து பாம்பு சீற வர, பூனை அதனை தடுக்க முயன்றது. இதனால் பூனைக்கும், பாம்புக்கும் மோதல் ஆனது. ஒருகட்டத்தில் பூனையின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

வீட்டில் படுத்திருந்த சாந்தியை பாம்பு கடித்தது. இதனால் சாந்தி சத்தம் போட்டு அலறினார். சத்தம் கேட்டு அவரது மகன் ஓடி வந்து பார்த்தார். அப்போது சாந்தியை கடித்த பாம்பு அங்கிருந்து வெளியேறிச் சென்றது. உடனடியாக சாந்தியை மீட்ட அவரது மகன் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தி இறந்தார். இதுகுறித்து சாந்தியின் மகன் அளித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே பூனை கடித்ததில் பாம்பும் பலியானது.

Tags:    

Similar News