உள்ளூர் செய்திகள் (District)

திண்டுக்கல் அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

Published On 2024-09-27 09:26 GMT   |   Update On 2024-09-27 09:26 GMT
  • படுகாயம் அடைந்த பவனேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
  • ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்:

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி புதுரை சேர்ந்தவர் அர்ச்சுனன். இவரது மகன் பவனேஷ் (வயது 17). இவர் தனது அம்மா ஞானம், அண்ணன் சுனில் ஆகியோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பாக பாண்டிச்சேரி சிவன் கோவிலில் சிற்ப வேலைக்காக சென்றார்.

பின்னர் கன்னியாகுமரி செல்வதற்காக நேற்று இரவு 9:30 மணி அளவில் சென்னையில் இருந்து அனந்தபுரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் படியில் அமர்ந்து பயணம் செய்து வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை திண்டுக்கல்லை கடந்து மொட்டணம்பட்டி அருகே ரெயில் சென்ற போது எதிர்பாராதமாக நிலை தடுமாறி பவனேஷ் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த பவனேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், எஸ்.பி தனிப்பிரிவு காவலர் ராஜேஷ் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News