உள்ளூர் செய்திகள்

திருப்பூரில் வாலிபரை கொன்று வீட்டிற்குள் புதைக்கப்பட்ட சம்பவம்- கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலியே கொன்று புதைத்தார்

Published On 2022-08-27 09:23 GMT   |   Update On 2022-08-27 09:23 GMT
  • கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த பொங்குபாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் மணிகண்டன் தீயில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
  • செக்ஸ் டார்ச்சர் செய்ததால் வாலிபரை கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலி கொன்று புதைத்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்:

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி அபிராமி (வயது 24). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் சிவகாசியில் உள்ள அட்டை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். அதே நிறுவனத்தில் சிவகாசியை சேர்ந்த மணிகண்டன் (35) என்பவரும் வேலை பார்த்து வந்தார். அப்போது மணிகண்டனுக்கும், அபிராமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

இந்தநிலையில் அபிராமி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து மணிகண்டன், தனது தாயார் பஞ்சவர்ணம் மற்றும் 2குழந்தைகளுடன் திருப்பூருக்கு வந்து தியாகி குமரன் காலனியில் வீடு வாடகைக்கு பிடித்து கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த பொங்குபாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் மணிகண்டன் தீயில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் அவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இது குறித்து 15 வேலம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது உடல் கிடந்த பகுதியில் இருந்து சற்று தொலைவில் இருந்த அபிராமியின் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வருவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று வீட்டுக்குள் தோண்டி பார்த்தனர். அப்போது அங்கு செல்போனும், சிதைந்த கையும் இருந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

எனவே மணிகண்டனை கொலை செய்து வீட்டுக்குள் புதைத்த பின்னர் துர்நாற்றம் வீசியதால் உடலை மீ்ண்டும் குழியில் இருந்து எடுத்துச் சென்று எரித்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

இதையடுத்து அந்த வீட்டில் இருந்து தலைமறைவான அபிராமியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தனது கணவர் பரமசிவத்துடன் சேர்ந்து மணிகண்டனை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து பரமசிவம், அபிராமி, அபிராமியின் தாய் பஞ்சவர்ணம் (48) ஆகிய 3பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பரமசிவம், அபிராமி ஆகியோர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். இது பற்றி போலீசார் கூறியதாவது:-

சிவகாசியை சேர்ந்த மணிகண்டனும் , பரமசிவமும் நண்பர்கள். இதனால் மணிகண்டன் அடிக்கடி பரமசிவம் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பரமசிவத்தின் மனைவி அபிராமிக்கும், மணிகண்டனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். இதையறிந்த பரமசிவம் 2பேரையும் கண்டித்துள்ளார். மேலும் சிவகாசி போலீஸ் நிலையத்திலும் புகார் செய்துள்ளார். போலீசார் மணிகண்டனை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். இருப்பினும் 2பேரும் கள்ளக்காதலை கைவிடவில்லை.

இதையடுத்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அபிராமி தனது 2 குழந்தைகள், தாய் பஞ்சவர்ணம், கள்ளக்காதலன் மணிகண்டன் ஆகியோருடன் திருப்பூருக்கு வந்து விட்டார்.

திருப்பூர் பொங்குபாளையம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தாங்கள் கணவன் -மனைவி என்று கூறி தங்கியுள்ளனர். மேலும் அபிராமி குடம் வியாபாரம் செய்து வந்துள்ளார். மணிகண்டன் பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்தநிலையில் பரமசிவம் திருப்பூரில் தங்கியிருக்கும் குழந்தைகளுடன் அவ்வப்போது பேசி வந்துள்ளார். இதை மணிகண்டன் கண்டித்துள்ளார். மேலும் மணிகண்டன் தினமும் குடித்து விட்டு வந்து அபிராமிக்கு செக்ஸ் டார்ச்சர் செய்துள்ளார். நாளுக்குநாள் மணிகண்டனின் டார்ச்சர் அதிகரிக்கவே என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த அபிராமி தனது கணவர் பரமசிவத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் தெரியாமல் மணிகண்டனுடன் வந்து விட்டேன். இனிமேல் அவனுடன் என்னால் வாழ முடியாது. என்னை மன்னித்துவிடுங்கள். குழந்தைகளின் எதிர்காலம் கருதி எங்களை சிவகாசிக்கு அழைத்து செல்லுங்கள் என்றார்.

இதையடுத்து கடந்த 20-ந்தேதி இரவு திருப்பூர் வந்த பரமசிவம், அபிராமி தங்கியிருந்த வீட்டிற்கு சென்றார். அங்கு நன்றாக தூங்கி கொண்டிருந்த மணிகண்டனின் கழுத்தில் கத்தியால் குத்திக்கொன்றார். பின்னர் உடலை வீட்டில் உள்ள அறையில் குழி தோண்டி புதைத்தார். பின்னர் மனைவி, குழந்தைகளை அழைத்து கொண்டு சிவகாசிக்கு சென்றார். அபிராமியின் தாய் பஞ்சவர்ணத்தை மட்டும் அங்கு இருக்குமாறு கூறி விட்டு சென்றார். கடந்த 23-ந்தேதி வீட்டில் இருந்து துர்நாற்றம் வரவே பஞ்சவர்ணம் பரமசிவத்தை தொடர்பு கொண்டு கூறியுள்ளார். உடனே அவர் திருப்பூர் வந்து 23-ந்தேதி இரவு மணிகண்டனின் உடலை தோண்டி எடுத்து சாக்குமூட்டையில் வைத்து கட்டினார்.

பின்னர் மொபட்டில் உடலை எடுத்து கொண்டு பொங்குபாளையம் பகுதியில் உள்ள காலி இடத்தில் தீ வைத்து எரித்து விட்டு , மாமியாருடன் மீண்டும் சிவகாசிக்கு தப்பி சென்றுள்ளார். ஆனால் போலீசார் விசாரணையில் 3பேரும் சிக்கிக்கொண்டனர். தொடர்ந்து 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணமாகி புவனேஸ்வரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். செக்ஸ் டார்ச்சர் செய்ததால் வாலிபரை கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலி கொன்று புதைத்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News