உள்ளூர் செய்திகள்

பிரதமர் மோடியை பார்க்க வந்த வெளியூர் பா.ஜ.க. நிர்வாகிகள் வெளியேற்றம்

Published On 2024-05-31 05:53 GMT   |   Update On 2024-05-31 05:53 GMT
  • விடுதியில் முன்பதிவு செய்திருந்த அறைகள் ரத்து செய்யப்பட்டது.
  • கட்சி நிர்வாகிகள் யாரும் கன்னியாகுமரிக்கு வரவில்லை.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி நேற்று மாலை கன்னியாகுமரி வந்தார். அவரை வரவேற்க மத்திய மந்திரி எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் முக்கிய பிரமுகர்களுக்காக கன்னியாகுமரி விடுதிகளில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் பிரதமர் மோடியை வரவேற்க கட்சி நிர்வாகிகள் யாரும்வர வேண்டாம் என்று தமிழக பா.ஜ.க.வினருக்கு டெல்லி தலைமை உத்தரவிட்டது. அதன்பேரில் விடுதியில் முன்பதிவு செய்திருந்த அறைகள் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்ததும் அரசு விருந்தினர் மாளிகை அருகே முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் சிலரும் வந்து நின்றனர்.

ஆனால் போலீசார் பாதுகாப்பு காரணங்களை காட்டி, பொன். ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகள் கன்னியாகுமரியில் முன்பதிவு செய்திருந்த அறைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதனால் கட்சி நிர்வாகிகள் யாரும் நேற்று கன்னியாகுமரிக்கு வரவில்லை.

Tags:    

Similar News