உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூரில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

Published On 2023-01-14 08:08 GMT   |   Update On 2023-01-14 08:08 GMT
  • பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
  • மல்லிகை பூக்களின் வரத்து குறைவாலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் பூக்கள் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

கடந்த வாரம் குண்டுமல்லிகை பூ ஒரு கிலோ ரூ.1300- க்கும், முல்லை ரூ.1000-க்கும், காக்கட்டான் ரூ.400-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும், சம்பங்கி கிலோ ரூ.70- க்கும், செவ்வந்தி ரூ.60-க்கும், அரளி ரூ.250- க்கும், ரோஜா ரூ.150-க்கும் விற்பனையானது.

நேற்று நடந்த ஏலத்தில், குண்டு மல்லிகை பூ கிலோ ரூ.5000-க்கும், சம்பங்கி ரூ160- க்கும், அரளி ரூ.450- க்கும், ரோஜா ரூ.400-க்கும், முல்லைப் பூ ரூ.4000-க்கும், செவ்வந்திப்பூ ரூ.200- க்கும், கனகாம்பரம் ரூ.1700-க்கும், காக்கட்டான் ரூ.1800-க்கும் விற்பனையானது.

மல்லிகை பூக்களின் வரத்து குறைவாலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் பூக்கள் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது. பூக்களின் விலை உயர்வடைந்து உள்ளதால் பூ பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News