உள்ளூர் செய்திகள் (District)

பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்.

தேனி அல்லிநகரம் நகராட்சி கூட்டம்: அ.தி.மு.க, பா.ஜ.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

Published On 2023-11-08 05:48 GMT   |   Update On 2023-11-08 05:48 GMT
  • தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற கூட்டம் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
  • வார்டு பகுதியில் அடிப்படை பணிகள் எதுவும் இதுவரை நடக்கவில்லை என்றும் மாதந்தோறும் நகராட்சி கூட்டம் நடத்தவில்லை என்பதை கண்டித்து கூட்டத்தில் இருந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தேனி:

தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற கூட்டம் தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. துணைத்த லைவர் செல்வம், நகராட்சி ஆணையாளர் (பொ) பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் பால முருகன், கடவுள், நாராயண பாண்டியன், விஜயன், ராஜ்குமார், தினேஷ்குமார், மணிகண்டன், சந்திரமோகன், கிருஷ்ண குமாரி, ஆனந்தி, சரஸ்வதி, சங்கீதா மற்றும் சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம், நகர அமைப்பு அலுவலர் சலார் அப்துல் நாசர் உள்பட கவுன்சிலர்கள், நகராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கவுன்சிலர் நாகராஜ், நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படு த்தாத வகையில் காலதாமதம் இன்றி வரிகளை விதிக்க பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

அதுபோல கவுன்சிலர்கள் நாராயண பாண்டியன், ராஜ்குமார் மற்றும் பெரு ம்பாலான கவுன்சிலர்கள் பேசுகையில், தேனி நகரில் உள்ள வாரச்சந்தை குத்தகை ஏலம் குறைந்த தொகைக்கு ஏலம் போயிருப்பதால் அந்த தீர்மானத்தை ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சங்கீதா, சரஸ்வதி, கிருஷ்ணபிரபா, பாப்பா, கிருஷ்ணவேணி மற்றும் பா.ஜ.க கவுன்சிலர் ஆனந்தி ஆகியோர் வார்டு பகுதியில் அடிப்படை பணிகள் எதுவும் இதுவரை நடக்கவில்லை என்றும் மாதந்தோறும் நகராட்சி கூட்டம் நடத்தவில்லை என்பதை கண்டித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதனை அடுத்து வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு இந்த கோரிக்கையை வலியுறுத்தி அடிப்படை பணிகளை நமக்கு நாமே திட்டத்தில் மேற்கொள்ள வேண்டுமென பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் நகராட்சி துணைத்தலைவர் செல்வம் மற்றும் நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பாலமுருகன், சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நகராட்சி பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News