எலையமுத்தூர் பகுதியில் தண்ணீர் திருட்டை தடுக்காவிட்டால் போராட்டம் - விவசாயிகள் அறிவிப்பு
- விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆர்.டி.ஓ. அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
- நீர்வழிப் பாதையை அளவீடு செய்வதே பெரும் போராட்டமாக உள்ளது.
உடுமலை :
உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆர்.டி.ஓ. அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு உடுமலை ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியதாவது:-
மவுனகுருசாமி:பூளவாடி உள்ளிட்ட பகுதிகளில் நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்வழிப் பாதையை அளவீடு செய்வதே பெரும் போராட்டமாக உள்ளது. அதற்கென தனி அளவையர் நியமிக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் மூலம் அளவீடு செய்ய அனுமதி வழங்க வேண்டும். பூளவாடி ஊராட்சியில் 10 கிலோ மீட்டருக்கு மேல் மண் சாலைகளாக உள்ளது.அவற்றை தார்சாலைகளாக மாற்ற வேண்டும்.
பரமசிவம்: நாய்கள் தொல்லை அதிகரித்து விட்ட நிலையில் எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் வெறி நாய்க்கடி தடுப்பூசி போட வேண்டும். எலையமுத்தூர் பகுதியில் பன்னாட்டு நிறுவனம் ஒன்று பல ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்ததுடன் தண்ணீர் திருட்டிலும் ஈடுபட்டு வருகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயிகள் போராடும் நிலை ஏற்படும். ஜம்புக்கல் கரடு மலைப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை ஆவணங்களின் அடிப்படையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரணி வாய்க்கால் பாசனத்துக்கு இடையூறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேப்போல் பல்வேறு விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர்.