திருப்பூரில் வீடுகளுக்குள் புகுந்து நகை, பணம் திருடிய வாலிபர் கைது - திருப்பதியில் பதுங்கி இருந்த போது தனிப்படை போலீசார் மடக்கினர்
- திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி பின்புறம் பகுதியில் உள்ளவீடு உள்ளிட்ட 3 இடங்களில் நகை, பணம் திருடப்பட்டது.
- 5½ பவுன் நகை, ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி பின்புறம் பகுதியில் உள்ளவீடு உள்ளிட்ட 3 இடங்களில் நகை, பணம் திருடப்பட்டது. இது தொடர்பான புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் வீடுகளுக்குள் புகுந்து திருடிய நபரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் வீடுகளுக்குள் புகுந்து திருடிய மர்ம ஆசாமி திருப்பதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் திருப்பதி விரைந்து சென்றனர். அங்கு பதுங்கி இருந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவனை திருப்பூர் அழைத்து வந்து விசாரித்த போது அவன் கிருஷ்ணகிரி மாவட்டம்போச்சம்பள்ளியை சேர்ந்த பூவரசன் (வயது 23), என்பதும் திருப்பூரில் தங்கி இருந்து வீடுகளில் திருடிய நகை பணத்துடன் திருப்பதி தப்பி சென்றதும் தெரியவந்தது. மேலும் திருப்பதியில் மொட்டை போட்டுவிட்டு வெளி மாநிலங்களில் தலைமறைவாக இருக்க முடிவு செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவனை கைது செய்து அவனிடம் இருந்த 5½ பவுன் நகை, ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.