கரும்பு தட்டையை தோளில் சுமந்துவந்த விவசாயியால் பரபரப்பு
- காலம் கடந்து அறுவடை செய்யப்படாததால் வீணானதாக குற்றச்சாட்டு
- நஷ்டஈடு கோரி மனு
திருச்சி,
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. லால்குடி வட்டம் புள்ளம்பாடி புஞ்சைசங்கேந்தி பகுதியை சேர்ந்த விவசாயி பாண்டியன்(வயது 54) என்பவர் மனு ஒன்றை அளித்தார். அதில், காட்டூர் சர்க்கரை ஆலை மூலம் வழங்கப்பட்ட கரணைகளை எனது 3 ஏக்கர் விவசாய நிலத்தில் நடவு செய்தேன். கரும்பு முதிர்ச்சி அடைந்த நிலையில் ஒப்பந்தப்படி அந்த ஆலை நிர்வாக அறுவடை செய்ய வரவில்லை. இதனால் 8 மாதம் கடந்த நிலையில், கரும்பு முதிர்ச்சி அடைந்து பலன் கொடுக்கும் தன்னையை இழந்து விட்டது. கடந்த ஆண்டில், 3 ஏக்கர் கரும்பு பயிரிட்டதில் அமோக விளைச்சல் கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு கரும்பு அறுவடை செய்யப்படாமல், பாதிக்கப்பட்டதால் 20 டன் வருவதே சந்தேகமாக உள்ளது. அறுவடை செய்யப்படாமல், காலம் கடந்த கரும்பு நிற்பதால் பூச்சு தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. இதனால் முற்றிலும் பலன் அளிக்காத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே உரிய நஷ்ட ஈடு பெற்றுத்தரவேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். மனு அளிக்க வந்த விவசாயி பாண்டியன் தனது தோளில் அறுவடை செய்யப்படாமல் தட்டையாக மாறிபோன கரும்பு கட்டை தோளில் சுமந்து வந்தது திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.