கலைப்பண்பாட்டு துறை சார்பில் மாவட்ட அளவிலான போட்டிகள்
- கலைப்பண்பாட்டு துறை சார்பில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்றது
- மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு
திருச்சி
தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றங்கள் மூலம் ஆண்டு தோறும் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான கலைப் போட்டிகள் ஸ்ரீரங்கம் மூலத்தோப்பில் உள்ள அரசு இசைப்பள்ளியில் நடந்தது.
இதில் 5-8, 9-12, 13-16 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு பரதநாட்டியம், கிராமிய நடனம், குரலிசை, ஓவியம் ஆகிய கலைகளில் போட்டிகள் நடந்தது. பரதநாட்டியத்தில் 22 பேரும், கிராமிய நடனத்தில் 11 பேரும், குரலிசையில் 36 பேரும், ஒவியப் போட்டியில் 64 பேரும் என மொத்தம் 133 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கலைப் போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம், இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடத்தில் வெற்றிப்பெறும் மாணவர்களுக்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். 9-12, 13-16 வயதிற்குட்பட்ட பிரிவில் முதலிடம் பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர் என தெரிவிக்கப்பட்டது.
போட்டிக்கான ஏற்பாட்டினை திருச்சி மண்டல கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குனர் (பொ) நீலமேகன், கலை பண்பாட்டுத்துறை ஊழியர்கள், சிறுவர் மன்ற திட்ட அலுவலர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.