பழைய காவேரி பாலத்தில் இருசக்கர வாகனங்கள் செல்ல வழிவகை செய்ய கோரி மனு
- பழைய காவேரி பாலத்தில் இருசக்கர வாகனங்கள் செல்ல வழிவகை செய்ய கோரி மனு அளிக்கப்பட்டது
- கலெக்டரிடம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அளித்தார்
திருச்சி:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வக்கீல் எம். சரவணன், கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து ஒரு மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;- திருச்சி காவேரி ஆற்று பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரு சக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் பாலத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதியில் இருந்து தினமும் பணி நிமித்தமாகவும், பள்ளிகளுக்கும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இவர்கள் தற்போது பைபாஸ் சாலையில் வாகன நெரிசலில் சிக்கி ஆபத்தான நிலையில் பயணிக்க வேண்டி இருக்கிறது. மேலும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்க இருக்கிறது.
ஆகவே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நலன் கருதி அந்தப் பகுதியில் உள்ள பழைய பாலத்தை சீர் செய்து இருசக்கர வாகனங்கள் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து தமிழக முதலமைச்சரிடமும் மனு கொடுக்க உள்ளதாக வழக்கறிஞர் சரவணன் தெரிவித்தார்.