மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து- லாரி சக்கரத்தில் சிக்கிய மாணவரின் கால் நசுங்கியது
- சென்னையில் இருந்து சோளிங்கர் நோக்கி சென்ற லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- திருத்தணி பைபாஸ் ரவுண்டானா ஒரு வழிபாதையில் கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
திருத்தணி:
திருத்தணி பெரிய தெரு பகுதியில் வசிப்பவர் பாபு. இவரது மகன் கார்த்தி (வயது 16). இவர் ஆர்.கே. பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை மாணவர் கார்த்தி மோட்டார் சைக்கிளில் திருத்தணி பைபாஸ் ரவுண்டானா பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சென்னையில் இருந்து சோளிங்கர் நோக்கி சென்ற லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் கார்த்தி சிக்கிக்கொண்டார். அவரது 2 கால்களும் நசுங்கியது. ஆபத்தான நிலையில் இருந்த கார்த்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எப்போதும் பரபரப்பாக இருக்கும் திருத்தணி பைபாஸ் ரவுண்டானா ஒரு வழிபாதையில் கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.