உள்ளூர் செய்திகள் (District)

கடலில் வளரும் வைகை ஆற்று ஜிலேபி மீன்கள்- மீனவர்கள் ஆச்சரியம்

Published On 2024-08-03 04:47 GMT   |   Update On 2024-08-03 04:47 GMT
  • ஆறுகளில் வளரும் ஜிலேபி மீன்கள் கூட்டம் கூட்டமாக இருப்பதை கண்டறிந்தனர்.
  • உப்புநீர் சூழலுக்கு ஏற்ப இந்த ஜிலேபி மீன்கள் மாற்றி பழகி கொண்டிருப்பது தெரிய வந்தது.

ஆறு, ஏரி, குளங்களில் உள்ள மீன்கள் உப்பு தன்மை கொண்ட கடல் நீரில் உயிர் வாழாது என கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே வங்காள விரிகுடா கடலில் ஆறு மற்றும் ஏரிகளில் உள்ள ஜிலேபி மீன்கள் பிடிபட்டது. இதனைக் கண்டு மீனவர்கள் ஆச்சரியமடைந்தனர்.

இது குறித்த தகவல் அறிந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழக கடல் மற்றும் கடலோர ஆய்வுத் துறை பேராசிரியர் முத்துசாமி ஆனந்த் என்பவர் தலைமையில் ஆய்வு செய்தனர்.

அப்போது கடலில் பாக் ஜலசந்தி பகுதியில் ஆறுகளில் வளரும் ஜிலேபி மீன்கள் கூட்டம் கூட்டமாக இருப்பதை கண்டறிந்தனர். இந்த மீன்கள் கடலில் 2 முதல் 5 மீட்டர் ஆழத்தில் சுற்றி திரிகின்றன. 11 சென்டிமீட்டர் முதல் 23 சென்டிமீட்டர் வரை மீன்கள் வளர்ந்துள்ளன.

கடல் தண்ணீரில் இந்த மீன்கள் இனப்பெருக்கம் செய்துள்ளன.

தன்னை சுற்றியுள்ள உப்புநீர் சூழலுக்கு ஏற்ப இந்த ஜிலேபி மீன்கள் மாற்றி பழகி கொண்டிருப்பது தெரிய வந்தது.

இவற்றின் வயிற்றில் உள்ள உணவை பார்த்தால் கடலில் உள்ள மென்மையான உயிரினங்களான கோப் காய்கள், மொல்லஸ்கள், சிறிய பிளாங்டன்கள், பாலி சீட் புழுக்கள் போன்றவற்றை சாப்பிட்டு வளர்ந்தது தெரிய வந்தது.

இந்த ஜிலேபி மீன்கள் கடலில் இனப்பெருக்கத்தை அதிகரித்து வருவதால் அவை உண்ணக்கூடிய கடல் வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். வைகை ஆற்றில் இருந்து ஜிலேபி மீன்கள் கடலில் கலந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

Tags:    

Similar News