உள்ளூர் செய்திகள் (District)

ஈரோட்டில் போக்குவரத்து விதி மீறல்- 70 பெண் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பு

Published On 2024-07-08 09:45 GMT   |   Update On 2024-07-08 09:45 GMT
  • பெண் வாகன ஓட்டுகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
  • அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஈரோடு:

ஈரோடு காவிரி சாலை, கிருஷ்ணா தியேட்டர் அருகே நேற்று மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெண் வாகன ஓட்டிகள் லைசன்ஸ் பெற்று வாகனங்களை ஓட்டுகின்றனரா? என்பது குறித்தும், ஆர்.சி.புத்தகம், ஹெல்மெட் அணிதல், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் முறையாக உள்ளனவா என்பது குறித்தும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக பெண் வாகன ஓட்டுகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 140-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்ட 70 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் ரூ.80 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

மேலும் பெண் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிதல், டிரைவிங் லைசென்ஸ் பெறுதல், இன்சூரன்ஸ் உள்ளிட்டவை குறித்து அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வரும் நாட்களில் இதுபோல ஆண், பெண் என பாரபட்சமின்றி வாகன சோதனை மேற்கொண்டு அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News